Monday, July 24, 2006

கோபத்தை இ-மெயிலில் வெளிப்படுத்துவது நல்லதா?.

கோபத்தை இ-மெயிலில் வெளிப்படுத்துவது நல்லதா?. சர்ச்சைகளை நேரில் பேசி தீர்ப்பதற்கும் அல்லது தொலைபேசியில் பேசி தீர்ப்பதற்கும், இ-மெயிலில் வார்த்தகளை கொட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளதா?
இருக்கின்றது என்று தான் எனக்கு தோன்றுகிறது. எவ்வளவோ வசதியாக இருந்தாலும் இ-மெயில் எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த தோதுவாக உள்ளதா என்பதில் சந்தேகம் இருக்கிறது. வார்த்தைகளில் உணர்வுகளை கொண்டுவந்து விடலாம். ஆனால் அது விரும்புகிற விளைவுகளை தான் ஏற்படுத்துகிறதா என்பதை முன்கூட்டியே ஆன்டிசிபேட் செய்ய வேண்டும்.
பிரச்சினைகளை தீர்த்து கொள்ள, அல்லது எனது அதிருப்தியை தெரிவிக்க தொலைபேசியை பயன்படுத்துவது உண்டு. ஆனால் மிக உறுதியாக எச்சரிக்கை விட விரும்பினால் அல்லது எனது கருத்தை அடித்து சொல்ல விரும்பினால் நான் தயக்கமே இல்லாமல் இ-மெயிலை பயன்படுத்துவேன். முன்னர் கூறியது போல அது சரியான விளைவுகளை ஏற்படுத்துமா என்கின்ற கண்ணோடு நமது இ-மெயிலை நாம் பார்க்க வேண்டும்.என்னுடைய கோபத்தை காட்டவோ , எச்சரிக்கை விடவோ அல்லது நான் தைரியமாக எதிர்த்து நிற்பேன் என்று காட்டவோ மிக கவனமாக நான் கடுமையான சொற்களை பயன்படுத்துவேன். இன்னமும் சொல்ல போனால் இந்த மாதிரி இ-மெயில்களில் அடுத்த ஆளின் மண்டை கனத்தை மட்டம் தட்டும் வரிகள் இடம் பெறும்.
இவ்வாறு நான் செய்வதை என் நண்பர்கள் பலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். அப்போது நான் சொன்ன பதில்: நம் மீது தவறு இல்லாதவாறு நாம் பார்த்து கொள்ளவேண்டும். நமது அடிப்படை குணங்கள் நன்றாக இருக்க வேண்டும். முக்கியமாக , நேரத்தை வீணடிக்காமல் இருப்பது, கடமை உணர்ச்சி போன்ற விஷயங்களில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய அடிப்படை குணங்கள் நன்றாக இருந்தால் நாம் எதற்காகவும் பயப்பட வேண்டியது இல்லை. நான் என்னுடைய மேலதிகாரிகளை எல்லாம் விட்டு வெளுத்திருக்கிறேன் இ-மெயிலில். அவர்கள் தான் அடங்கி போனார்களே ஒழிய நான் சிறிது கூட சமரசம் செய்த்ததில்லை. எனவே இ-மெயிலில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். ஆனால் எழுத்தில் ஒரு விஷயம் கொடுக்க படும் போது அது உங்களை சரியான முறையில் வெளிப்படுத்துகிறது என்பதில் மிக எச்சரிக்கையோடு இருங்கள். அவ்வாறு முடியாத பட்சத்தில் இ-மெயிலை தவிர்த்து விடுங்கள்.
என்னுடைய தனிப்பட்ட அனுபவம் ஒன்றை கூறுகிறேன். ஒரு மேலதிகாரி என்னிடம் மிக தவறாக நடந்து கொண்டார். நான் அவருக்கு கீழ்கண்ட வரிகளை அனுப்பினேன். அந்த மெயிலில் மற்ற மேலதிகாரிகள் காப்பி செய்யபட்டிருந்தார்கள்:
என்னை காட்டிலும் மிகுந்த அதிகாரம் கொண்ட தாங்கள் உங்கள் காரியதரிசி செய்கின்ற அளவு வேலையாத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான் என்னை விட பல மடங்கு அனுபவம் வாய்த்தவர்களை விட கூடுதல் வேலை செய்து கொண்டிருக்கிறேன், நீங்கள் செய்கின்ற வேலையை செய்ய இந்த அலுவலகத்திற்கு பலர் கிடைப்பார்கள். ஆனால் நான் செய்வதை செய்கின்ற ஆளை கண்டுபிடிக்க இந்த அலுவலகம் நிறையவே சிரமபடும் .
இந்த மெயிலுக்கு தக்க பலன் கிடைத்தது. அதற்கு பின்னர் அந்த மேலதிகாரி யாருடனும் வாலட்டுவதில்லை.
எப்படி இருக்கிறது என்னுடைய எடுத்து காட்டு?

20 comments:

பாலசந்தர் கணேசன். said...

சோதனை பின்னூட்டம்

கிவியன் said...

//வார்த்தைகளில் உணர்வுகளை கொண்டுவந்து விடலாம். ஆனால் அது விரும்புகிற விளைவுகளை தான் ஏற்படுத்துகிறதா என்பதை முன்கூட்டியே ஆன்டிசிபேட் செய்ய வேண்டும்.// கணேசன் இதுதான் கடினமானது, பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதையா ஆகிவிடும் வாய்ப்பிருக்கிரது. மிகச் சில சந்தர்பங்களில் நீங்கள் கூறுவது சாத்தியம். எனினும், இமெயில் மிக உயர்ந்த சுதந்திரத்தை கொடுக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. ஏனென்றால் மெயில் அனுப்பிவிட்டு அந்த உணர்விலேயே (ஒருவித இறுமாப்புன்னு வைங்களேன்) சில நிமிடங்கள் இருக்கலாம் அதன் விளைவு வந்து சேரும் வரும் வரை.

பாலசந்தர் கணேசன். said...

கடினமான விஷயங்களை கற்று கொள்வது நமக்கு நல்லது தானே கிவியன் அவர்களே,
உங்களுடைய ஜட்ஜ்மெண்ட் திறனை நுணுக்கமாக வைத்து கொள்ள இது உதவும். அடிப்படை குணங்கள் சரியானதாக இருக்கவேண்டும் என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். இது இருந்தால் எந்த விதமான பேட் ட்ரீட்மெண்டையும் எதிர்த்து நிற்கலாம். தவறான ட்ரீட்மெண்டை கண்டிக்க நமக்கு முழு உரிமையும் உண்டு என்பதை நாம் மறந்து விட கூடாது.

நாமக்கல் சிபி said...
This comment has been removed by a blog administrator.
பாலசந்தர் கணேசன். said...

உங்களுக்கு சிறு சந்தேகம் வந்தாலும் தவிர்த்து விடுங்கள் என்பதையும் நான் குறிப்பிட்டுளேன்.

நாமக்கல் சிபி said...

நண்பர்களிடையே புரிந்து கொள்ளுதலில் தவறிருந்தால் முடிந்த வரை நேரிலோ, தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பேசுவதே சிறந்தது. நாம் எவ்வளவு புத்திசாலி தனமாக இ-மெயிலில் எழுதினாலும் அவர்கள் தவறாக புரிந்து கொண்டால் நாம் ஒரு நல்ல நட்பை இழந்துவிடுவோம்...
அனுபவத்தில் சொல்கிறேன்

பாலசந்தர் கணேசன். said...

கருத்துக்கு நன்றி வெட்டிபயல் அவர்களே...

VSK said...

நேரிலோ, தொலைபேசியிலோ பேசும்போது, குரலையும், முகத்தையும் வைத்தே என்ன எதிர்பாடு விளைந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.
மின்னஞ்சலில் அது கடினம்.
நாம் என்னதான் கவனமாகச் சொற்களைப் போட்டோம் என நினைத்தாலும், நாம் சற்றும் எதிர்பார்க்காத அர்த்தத்தை மறுமுனையில் புரிந்து கொண்டு, விரிசல் விழ வாய்ப்புகள் மின்னஞ்சலில் அதிகமே!
அனுபவம்!!

கோவி.கண்ணன் said...

என்ன இருந்தாலும் உங்க எஜமானரை 'நாய்' என்று இப்படி மறைமுகமாக தாக்கியிருக்கக் கூடாது :)))

பாலசந்தர் கணேசன். said...

ஐயோ கோவி கண்ணன் ,

நான் அப்படியெல்லாம் எதுவும் குறிப்பிடவில்லை. (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ). மேலதிகாரி எஜமானரும் அல்ல. அவரும் என்னை போல ஒரு தொழிலாளி.

கோவி.கண்ணன் said...

மேலதிகாரி யாருடனும் வாலட்டுவதில்லை.
எப்படி இருக்கிறது என்னுடைய எடுத்து காட்டு?
இதுக்கு என்ன அர்த்தம் :))

பாலசந்தர் கணேசன். said...

வாலாட்டுவது என்றால் சேட்டை பண்ணுவது என்று அர்த்தம்

கோவி.கண்ணன் said...

//வாலாட்டுவது என்றால் சேட்டை பண்ணுவது என்று அர்த்தம் //

தப்பா எடுத்துக்காதிங்க ... நான் கொஞ்சம் வாலாட்டினேன், அதாவது சேட்டைப் பண்ணினேன். அண்ணே ஈ மெயில் அனுப்பி பழிவாங்கிடாதிங்க :)

பினாத்தல் சுரேஷ் said...

எந்தக் கோபத்தையும் எழுத்துக்கள் மூலம் காட்டுவது உசிதமில்லை. காலம் கடந்தபின் பழைய எழுத்துக்களைப் பார்க்கையில் குற்ற உணர்ச்சி, வெட்கம் அவமானம் எல்லாம் சேர்ந்து பிடுங்கித் தின்னும். குழந்தைத்தனமாக உணர வைக்கும். கோபத்தை பேச்சோடு விடுங்கள்.

பழைய வலைப்பதிவுகள் பார்த்தாலே என்னால் தாங்கமுடிவதில்லை:-))

பாலசந்தர் கணேசன். said...

நீங்கள் எல்லாரும் எழுத்தில் உணர்வுகளை கொட்டுவதில் உள்ள டிஸ் அட்வான்டேஜஸை பார்க்கிறீர்கள். அதில் அட்வான்டேஜசும் உண்டு. நமக்கு அதை முறையாக பயன்படுத்த தெரிய வேண்டும். எதற்கெடுத்தாலும் இ-மெயிலில் பொங்கி எழுங்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் அசாதாரணமான(extraordinary) சூழ்நிலையில் எழுத்தின் வலிமையை நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று தான் நான் கூறுகிறேன்.

சீமாச்சு.. said...

என்ன பாலசந்தர் கணேசன்,
இப்பல்லாம் நாலு நாளைக்கு ஒரு பதிவுதான் போல...
ஒரு நாளைக்கு 10 பதிவுகள் வந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டதா?

என்னமோ போங்க.. இந்த இ-மெயில் மானேஜருக்கு எப்ப அனுப்பினீங்க? resume எல்லாம் ரெடியா வெச்சுக்குங்க..
நீங்க "வாலை ஆட்டறதில்லை" அப்படீன்னு நெனச்சுக்கிட்டிருப்பீங்க..
அவரு "புலி பதுங்கறது பாய்வதற்கு அடையாளம்"-னு நெனச்சுக்கிட்டிருக்கப்போறாரு..


சொந்த அனுபவத்துல சொல்றேன்.. மானேஜருங்க கிட்டயெல்லாம் வாலை ஆட்டாதீங்க..

வாய்மையும் நேர்மையும் வெல்லும் தான்.. ஆனால் சமயத்துல உங்களுக்கு அந்த அளவு பொறுமை இருக்காது.. சமயங்களில் அவை ரொம்ப லேட்டா வெல்லும்..

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

பாலசந்தர் கணேசன். said...

முதலில் அறிவுரைக்கு நன்றி சீமாச்சு அவர்களே,

-சொந்த அனுபவத்துல சொல்றேன்.. மானேஜருங்க கிட்டயெல்லாம் வாலை ஆட்டாதீங்க..

நான் யாரிடமும் வாலை ஆட்டுவதில்லை.

என்னமோ போங்க.. இந்த இ-மெயில் மானேஜருக்கு எப்ப அனுப்பினீங்க? ரெசுமெ எல்லாம் ரெடியா வெச்சுக்குங்க..

இதெல்லாம் நடந்து ரொம்ப நாளாகி விட்டது. அதற்கு அப்புறமும் நான் சக்கை போடு போட்டு கொண்டு தான் இருக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன். அறிவுரைக்கு நன்றி சீமாச்சு அவர்களே.

ஆனால் மிகவும் மோசமான நடத்தைகளை நாம் சகித்து கொள்ள வேண்டியதில்லை. தவறுகளை பொறுத்து கொள்ள வேண்டும். இந்த இரணடுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் தெரிய வேண்டும்.

ஒரேடியாக பயப்படுவது மோசமான நடத்தையை என்கரேஜ் செய்வது போல ஆகி விடுகிறது. இதை நாம் மறுக்க முடியுமா?
வாழ்க்கை என்பதில் பல சோதனைகள் வரத்தான் செய்யும் . நாம் தைரியத்தோடும் தன்னம்பிக்கயோடும் தான் எதிர் கொள்ள வேண்டும். இன்னமும் சொல்ல போனால் இந்த மாதிரி தைரியமானவர்களிடம் இந்த மாதிரி மேலதிகாரிகள் எச்சரிக்கையோடு நடத்துவார்கள். அரசு அலுவலகத்தில் வேண்டுமானால் இந்த மாதிரி அணுகுமுறை எடுபடாது. ஆனால் தனியார் நிறுவனங்களில் எல்லாரும் ஊழியர்களே. எல்லாரும் ஒழுங்கான முறையில் தான் நடந்து கொள்ள வேண்டும். என்னுடைய மேலதிகாரிக்கும் மேலதிகாரிகள் இருக்கிறார்கள்

துளசி கோபால் said...

'கோபம் சண்டாளம்'ன்னு எங்க பாட்டி சொல்வாங்க.
கோபத்தை விட்டொழிக்கறதுதான் நல்லது.

சீமாச்சு சொல்றதுபோல 'புலி பதுங்குதுன்னா...' கஷ்டம்தான்.

Hariharan # 03985177737685368452 said...

பாலச்சந்தர் கணேசன்,

இந்தியாவில் இ-மெயில் வராத 1991-94 சமயங்களில் எனது மேலாளரை மிரட்ட "ப்ரேக்டௌன் ஆன எக்விப்மெண்டின் பெரிய ஸ்ர்க்க்யூட் டயக்ராம்" எடுத்துக் கொண்டு தீவிரமாக விவாதிப்பேன். அப்புறம் சில மாதங்கள் நம் வழியில் வரமாட்டார். அப்பப்ப இந்த வேப்பிலை டிஷ்கஷன் நடத்திச் சமாளிப்பேன்.

சில மேலாளர்கள் கடுமையான பழிவாங்கு உணர்வோடு கொம்பேறிமூக்கன் மாதிரி சந்தர்ப்பங்களுக்குக் காத்திருப்பார்கள். MD, Directorன்னு ஆள் பார்க்காமல் ரொம்ப கொள்கையில் ரிஜிடாக இருந்ததில் நஷ்டங்களையும் வேறு வேலை, விசா மாற்றம் என அல்லல் பட்டு அலைச்சல் பட்டிருக்கிறேன்.

உலகம் மாறாதுன்றதை லேட்டாப் புரிஞ்சுட்டு உஜாலாவுக்கு மாறிட்டேன்.
இப்போ செலக்டிவ் அம்னீஷியா டெக்னிக் பயன்படுத்துகிறேன். ஞாபகம் வச்சிருந்தாத்தானே மறக்க, மன்னிக்க எல்லாம்.

நாகை சிவா said...

அலுவலகளில் மெயிலில் கோபத்தை காட்டுவது நல்லது. நண்பர்களிடம் கெட்டது.
ஒரு குழுவாக வேலை செய்யும் இடத்தில் நம் வார்த்தைகளை விட எழுத்து தான் என்றும் பேசும்.(என் அனுபவத்தில்)