Sunday, January 15, 2006

குட்டி ரேவதி என்ற பெயரில் என்ன இருக்கிறது?.

ஒரு திரைப்படத்தில் ஒரு வரியில் குட்டி ரேவதி என்ற பெயர் வருவதனால் என்ன தவறு இருக்கிறது?. இதற்காக ஒரு எழுத்தாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்?. இதில் ஆண் , பெண் பாகுபாடு பற்றிய முழக்கங்கள் வேறு. இந்த வசனம் நான் எழுதியதில்லை என்று அந்த எழுத்த்தாளர் மறுத்த பின்னர் மீண்டும் அதை கண்டித்து கோஷம் ஏன்?.

உண்மையில் அப்படி கண்டணம் தெரிவிக்கும் வண்ணம் அந்த வசனம் அத்து மீறலாக கூட காட்சி அளிக்கவில்லை. இதில் மிக பெரிய ஆச்சரியம்,உள்நோக்கம் உண்டு என்று தெளிவாக தெரியாத நிலையிலேயே இதற்கு ஒரு கண்டண கூட்டம் வேறு.

அத்து மீறியவர் ராமகிருஷ்ணன் இல்லை. இல்லாத ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கும் இந்த பெண் கவிஞர்களும், அதை ஆதரிக்கும் அனைவரும். ராமகிரிஷ்ணன் பற்றி கீழ்தரமாக இவர்கள் இமர்சிப்பதனால் அவருடைய புகழுக்கு இழுக்கு வரபோவதில்லை.

அப்படியே இவர்கள் சொல்வது உண்மை என்று வைத்து கொண்டாலும் இராமகிருஷ்ணன் இவ்வாறு குட்டி ரேவதியை தாக்கி எழுத வேண்டிய நோக்கம்(motive) என்ன?. அப்படி என்ன அவர்களுக்குள் பிரச்சினை?. உண்மையில் அவ்வாறு ஏதுமில்லை.

இராமகிருஷ்ணனை தாக்குபவர்கள் இதற்கு விளக்கம் அளிக்கட்டும். நன்றாக எழுத முடியாவிட்டாலும் பரவாயில்லை, நல்ல எழுத்தாளனை தொந்தரவு செய்யாமல் இருங்கள்.

பிரச்சினை குட்டி ரேவதி என்ற வசனத்தில் இல்லை. அந்த பெண் கவிஞரிடத்தில் உள்ளது.

7 comments:

Anonymous said...

நண்பரே, எழுத்தாளர் ஒருவர் தான் படைக்கும் ஒரு திரைப்பட வசனத்தில் சக எழுத்தாளினியின் பெயரை பயன்படுத்தியிருக்கிறார் என்றால் அதில் உள்நோக்கம் இல்லையா? ஏன் அவருக்கும் அந்தபெண் எழுத்தாளருக்கும் என்ன பிரச்சனை என பார்ப்பது மட்டும் தான் உமது வக்கிர சிந்தனையா? ஆணாதிக்க திமிரில் அலைந்து எதைஉம் சமூகத்தில் திணிக்க நினைக்கும் உம் போன்ற எழுத்தாளர்கள் எழுதாமல் இருப்பதே தமிழுக்கு செய்யவேண்டிய முதல் கடமை.

வசந்தன்(Vasanthan) said...

//அப்படியே இவர்கள் சொல்வது உண்மை என்று வைத்து கொண்டாலும் இராமகிருஷ்ணன் இவ்வாறு குட்டி ரேவதியை தாக்கி எழுத வேண்டிய நோக்கம்(motive) என்ன?. அப்படி என்ன அவர்களுக்குள் பிரச்சினை?. உண்மையில் அவ்வாறு ஏதுமில்லை.
//

நீங்களெப்படி அப்படியேதுமில்லையென்று அவர்சார்பில் சொல்ல முடியும்?
தான் எழுதவில்லையென்ற வசனத்துக்கு எஸ்.ரா வும் இப்படியொரு கருத்தைச் சொன்னார். கேலிக்குகூத்தாக இல்லையா?

அவர் எழுதவில்லை என்று மறுத்துவிட்டால் அவர் தூய்மையானவராகி விடுவாரா? படத்தில் வரும் எந்த வசனத்துக்கும் அவர்தானே பொறுப்பு? பிறகெப்படி இப்படித் தப்பிக்க முடியும்? குறைந்தபட்சம், யார் புகுத்தியது என்றாவது சொல்லலாமே?
சரி, வசனமெழுதுபவர் எழுதாமல் யாரோ இடையில் புகுத்தியிருப்பது உண்மையானால், இதுவே "உள்நோக்கத்துக்கான" பெரிய அத்தாட்சி அல்லவா?
இப்படியொரு வசனத்தைக் 'களவாக" உள்நுழைக்க வேண்டிய தேவையென்ன?

வாயாற் கேட்ட கேள்விக்கே, "உயிர்தப்பியதே பெரிய விசயமென்று" எஸ்.ரா புலம்புவதன் மூலம் அவரின் உள்நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரிகிறதே? இல்லாவிட்டால் எதற்காக பெண்கவிஞர்கள் மேல் அபத்தமான பொய்க்குற்றச்சாட்டைச் சொல்ல வேண்டும்? ஏற்கனவே அவர்கள்மேல் இவருக்கிருக்கும் காழ்ப்புணர்வு என்றுதான் எனக்குப் படுகிறது.

"குட்டி ரேவதி" என்பது ஏதோ சாதாரணமாக வரும் பெயர் போன்று பலர் சொல்வதைப்பார்க்க வியப்பாக இருக்கிறது. அதுவும் துப்பட்டாவையும் சேர்த்து ஒரு வசனமெழுதுவதை இயல்பாக்குவது இன்னும் வேடிக்கை. சரி, அதற்கு எழுந்த கேள்வியைக்கூட எதிர்கொள்ள முடியாத தன்மைதான் தெரிகிறது.

Anonymous said...

விடுங்க கணேசன்...
இவ்வளவு கூப்பாடுக்கும் காரணம் எங்கே அவர் சினிமாவில் சுஜாதா போல "successful"-ஆக வந்துவிடுவாரோ என்ற சக எழுத்தாளர்களின் பொறாமைதான்.

இதெல்லாம் ராமகிருஷ்ணனுக்கு ஒருவகையில நல்லதுதான்...அவர தெரியாதவனெல்லாம் "யார்யா ராமகிருஷ்ணன்?" அப்டின்னு தேடிப் பாத்து தெரிஞ்சிக்குவான்..

G.Ragavan said...

ஒரு நல்ல எழுத்தாளன் தனது பாத்திரங்களின் பெயரினைப் பயன்படுத்தும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமீபத்தில் ஒரு கதையில் ரகு என்ற பெயரைப் பயன்படுத்தியிருந்தேன். அது என் பெயர் இல்லையென்றாலும்...என் பெயரைப் போன்ற உச்சரிப்பு இருந்ததால் அந்தக் கதையே என் வாழ்வில் நிகழ்ந்தது என்று கருத்தப்பட்டு விட்டது. இத்தனைக்கும் அந்தப் பெயர் கதையில் ஒரேயொரு இடத்தில்தான் வரும்.

அப்படியிருக்க...பெரிய இலக்கியவாதியாக இருப்பவர் பெயரில் வெளி வந்திருக்கும் வசனத்தில் அப்படியொரு பெயர் எதற்குப் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்? சரி. குட்டி ரேவதி என்று இவர் ஒருத்தர் மட்டும் இல்லைதான். அப்படியிருக்க, அந்த வசனத்தைத் தான் எழுதவில்லை என்று சொல்வது ஏன்? வேறு யார் எழுதினார்கள்? வேற்றாள் எழுதியதற்குத் தன்னுடைய பெயரைப் போட்டுக்கொண்டாரா எஸ்.ரா...

நீங்களும் கூட பிரச்சனை அந்தக் கவிஞரிடத்தில் இருக்கிறது என்று முடித்திருப்பது......வேண்டாங்க...நான் சொல்றதுக்கு ஒன்னுமில்லை.

பாலசந்தர் கணேசன். said...

அன்புள்ள ராகவன் அவர்களே...
1.இந்த வசனம் தன்னால் எழுதபட்டது என்பதை ராமகிருஷ்ணன் மறுக்கிறார்.
2. இந்த வரி தன்னால் எழுதபட்டது.இந்த வரியின் இரண்டாவது வார்த்தையை தான் எழுதவில்லை என்று விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க முடியுமா?.
3. அப்படியே அந்த வசனத்தில் தனிப்பட்ட விமர்சனம் இருப்பதாக கருதினால் , தமிழ் நாட்டில் துப்பட்டா அணிந்த அத்தனை பெண்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

4. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த வசனத்தில் ஒரு தனி நபரை இழிவு படுத்துவதாக எதுவும் இல்லை.
5. யாருமே கவனித்திருக்க வாய்ப்பில்லாத ஒரு வசனம் தன்னை குறித்து எழுதபட்டது என்று அந்த கவிஞர் கூறுவது எனக்கு ஒவர் ரியாக்ஷனாகவே படுகிறது.

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி. நம் நட்பு நிறைய தொடரவேண்டும்.

Muthu said...

பாலச்சந்தர் கணேசன்,

இது உள்நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம்..நம்ம இலக்கியவாதிகளின் அரசியல் தமிழ்நாட்டு அரசியலை தூக்கி சாப்பிட்டுவிட்டு
முன்னகரும்....

இலக்கிய அரசியலை கொஞ்சம் காலம் கவனியும்..புரியும்...(உங்கள் மற்ற பதிவுகளும் கருத்துக்களும் அருமை)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

இருவரும் எழுத்துலக வட்டத்தில் இருக்கும் பட்சத்தில் அவர் குட்டி ரேவதி யின் பெயரை பயன்படுத்தி இருந்தால் கண்டிப்பாய் தவறுதான்

அவர்தான் நான் எழுதவில்லை என்று கூறிவிட்டாரே அப்புறமும் ஏன் அவரை தொந்தரவு படுத்தவேண்டும். அந்த இயக்குனரை அல்லவா கேட்க வேண்டும்